Tuesday, June 19, 2007

காய்கறி வளர்க்கலாம் வாரியளா?

அப்பாடா, ஒரு வழியாக கோடை காலம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையைச் சுற்றி ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது என் ஆசை.

இந்த மழை காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல யோசனை. உங்கள் வீட்டில் கொஞ்சுண்டு இடம் இருக்கா? கொஞ்சம் இடுப்பை வளைத்து வேலை செய்ய நீங்கள் தயாரா? சத்தான, உடம்புக்கு எந்தத் தீங்கும் செய்யாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா?

மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னீர்கள் என்றால், ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் காய்கறி வளரக்கப் புறப்படலாம்.

உங்கள் வீட்டில் காய்கறி வளர்ப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முதலில் காய்கறிக்காக நீங்கள் செலவு செய்யும் அத்தனை பணத்தையும் மிச்சப்படுத்தி விடலாம். ஞாயிற்றுக்கிழமை காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் கண்ணீர் விட்டு காய்கறி வாங்கினேன். விலைப்பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.

தக்காளி - 32 ரூ. காரட் - 32. பீன்ஸ் - 40. வெங்காயம் - 28. முருங்கைகாய் ஒன்று - 4 ரூ. சென்னையில் லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் கையில் காசு மிஞ்சாது போலிருக்கு.

இந்த மாதிரியான புலம்பலை எல்லாம் வீட்டில் காய்கறி வளர்ப்பதன் மூலம் எளிதாகத் தவிர்த்துவிடலாம். வருஷத்து மூவாயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

தவிர, ரசாயணம் மருந்துகள் கலக்காத காய்கறிகள் உங்களுக்குக் கிடைக்கும். மார்க்கெட்டில் விற்பனை ஆகும் காய்கறிகள் அளவுக்கதிகமான ரசயாண மருந்து கொட்டி வளர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்தக் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மை விட தீமைகளே அதிகம்.

இன்னொரு முக்கியமான விஷயம், சுவை. இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளின் சுவையே தனி. சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதே என்றெல்லாம் சொல்லாதீர்கள். முதலில் தக்காளியைப் பிழிந்து விட்டு வளர்க்க ஆரம்பியுங்கள். பிறகு கீரை, வெண்டை, கத்தரி.. இப்படி ஒவ்வொன்றாக வளர்க்கக் கற்றுக் கொள்ளலாம்.

வீட்டில் இடம் இல்லையா? நோ ப்ராபளம். மாடியில் மண் தொட்டி வச்சு அருமையா காய்கறி வளர்க்கலாம்.

மரம், செடிகொடிகளை வளர்ப்பது என்பது ஒரு வகை தியானம். அது நமக்குக் கொடுக்கும் உற்சாகமே தனிரகம்.

இந்த மழைக் காலத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க காய்கறி வளருங்க. என்ன விதை, எங்கே கிடைக்கும் என்கிற மாதிரி எந்த சந்தேகம் வந்தாலும் இந்த சம்சாரிகிட்டே கேளுங்க.

Monday, June 18, 2007

இனிப்புப் பிரியர்களின் கவனத்துக்கு!

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.

சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?

வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

தமிழகம் முழுக்க உள்ள சில இயற்கை விவசாயிகள் தாங்களே சொந்தமாக கரும்பு வளர்த்து, வெல்லத்தையும் நாட்டுச் சர்க்கரையையும் செய்துவிற்கிறார்கள். நல்ல வெல்லத்தையும் நாட்டுச் சர்க்கரையும் தேவைப்படுகிறவர்கள் பின்வரும் செல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம்.

சீத்தா ஏகாம்பரம்,
அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம்,
திருவண்ணாமலை.
செல்போன்: 94424-55665.

சேவியர்,
சென்னை.
செல்போன்: 9364433353.

Monday, June 4, 2007

இந்த முறையும் சம்பா அம்போதானா?

ஜூன் மாதம் பிறந்துவிட்டால் தஞ்சை பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேதி 12. காரணம், இந்தத் தேதியில்தான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து குறுவைப் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவார்கள்.

இந்த ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி அணையைத் திறந்துவிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்கிற ஆசையில் இருந்தார்கள் விவரம் புரியாத அப்பாவி விவசாயிகள் பலர். வழக்கம்போல விவசாயிகளின் ஆசை நிராசையாகிப் போனது.

கடந்த ஆண்டு ஓரளவுக்கு மழை பெய்தாலும் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இப்போது இருக்கும் தண்ணீரின் அளவு சுமார் 77 அடிதான். இவ்வளவு குறைவான நீரைக் கொண்டு விவசாயத்திற்குத் திறந்துவிட முடியாது. ஒருமுறை தண்ணீர் அளிக்க ஆரம்பித்தால் கடைசி வரை அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே, இந்த முறை தண்ணீர் இல்லை. குறுவை போடும் விவசாயிகளின் திட்டமும் அம்போதான்.

தஞ்சை பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு இன்னமும் மேட்டூரிலிருந்து தண்ணீரை எதிர்பார்ப்பதைவிட ஆயிரக்கணக்கில் இருக்கும் குளங்களை தூறெடுத்து மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை நன்றாகத் தேக்கி வைக்கலாம். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக அதிகரிக்கும்.

காரணம், மேட்டூர் தண்ணீரை மட்டுமே நம்பியே ஒவ்வொரு முறையும் சம்பாவை விதைக்க முடியாது. தண்ணீர் கிடைக்கும் போது தேக்கிக் கொள்வதே சிறந்த வழியாக இருக்குமே ஒழிய, கிடைக்கும் போது வழிந்தோட விட்டுவிட்டு, மீண்டும் எப்போது வருமோ என்று எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கக்கூடாது.