Thursday, September 4, 2008

அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி எடுபடுமா?

கூடிய விரையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி வருமா என்பதுதான் இப்போதைக்கு மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எப்படி அமையும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவில் (அந்தப் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்) தி.மு.க. - காங்கிரஸ் - விஜயகாந்த் என ஒரு முக்கோண கூட்டணி அமைய வாய்ப்புண்டு என்று எழுதி இருந்தேன். இப்போது ஜுவி போன்ற பத்திரிகைகளும் அந்தக் கோணத்தில் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.

இனி, அ.தி.மு.க. கூட்டணி எப்படி அமையும் என்று பார்ப்போம்.

அ.தி.மு.க.வைப் பொருத்த வரை இரண்டு விதங்களில் அது கூட்டணி அமைக்கலாம். ஒன்று, அது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். பா.ஜ.க. மீண்டும் டெல்லியில் ஆட்சிக்கு வர வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. பணவீக்கம், பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்பட பல பிரச்னைகளின் காரணமாக காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் மங்கவே செய்திருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸுக்கு எதிரி என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவது இயல்பான விஷயம்தான்.

தவிர, அ.தி.மு.க.வின் ஆதரவுடன் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சிக்குப பல இடைஞ்சல்களைக் கொடுக்க முடியும். முன்பு பா.ஜ.க. ஆட்சியில் இருந்தே போதே இது மாதிரியான பல விஷயங்களை அ.தி.மு.க. செய்திருக்கிறது.

அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க.வுக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. காரணம், இப்போதைக்கு தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியான தி.மு.க. காங்கிரஸுடன் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க. நிராகரித்து விட்டு, தனியாகப் போட்டி இட்டு, தமிழகத்தில் எங்களுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்று ஊரறியச் செய்யும் தவறை பா.ஜ.க. இன்னொரு முறையும் செய்யாது என்று நம்புவோம். அம்மா கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொள்வதன் மூலம் பா.ஜ.க. சில தொகுதிகளில் ஜெயிக்கவும் முடியும். அ.தி.மு.க. மூலம் பல எம்.பி.க்களின் ஆதரவையும் பெற முடியும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு.

சரி, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி ஏற்படவில்லை என்றால்...? அதற்கு சரிபங்கு வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து அவர்களையும் படாதபாடு படுத்தி, தானும் படாதபாடு பட்டவர் ஜெயலலிதா. மீண்டும் அவர்களோடு கூட்டு சேர ஜெயலலிதா தயக்கம் காட்டலாம். தவிர, தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதே ஜெயலலிதாவின் கணக்கு. வாஜ்பாயையும் அத்வானியும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் தெரியச் செய்தது நாங்கள் என்று பேசியவர் அவர். பா.ஜ.க. ஒரு தேவையில்லாத சுமை. அதைத் தேவையில்லாமல் தூக்கித் திரிய வேண்டுமா என்றுகூட அவர் நினைப்பதுண்டு.

அந்த நிலையில் அவர் கம்யூனிஸ்ட்டுகளின் வழிகாட்டுதலில் மாயாவதி தலைமையில் அமையப் போகும் மூன்றாம் அணியில் சேர ஒரு வாய்ப்புண்டு. மூன்றாம் அணியைப் பொருத்தவரை அகில இந்திய அளவில் அதற்கு பெரிய ஆதரவு ஒன்றும் இல்லை என்றாலும், இருக்கிற மிகச் சில பெரிய கட்சிகளில் தானும் ஒன்று என்கிற தெம்பு அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கும். பல மாநிலங்களில் இருக்கும் இந்தக் கட்சிகள் கொஞ்சம் நன்றாக வேலை பார்த்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும். இதன் மூலம் காங்கிரஸையும், பாஜகவையும் கொஞ்சம் ஆட்டிப் பார்க்க முடியும். தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால்கூட தான் நினைப்பதை அவர்கள் மூலம் எளிதாகச் சாதித்துக் கொள்ள முடியும் என்று ஜெயலலிதா நினைக்கலாம்.

தவிர, தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தனக்குக் கிடைக்கும். பா.ஜ.க.வோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு நிச்சயம் அதிகம். ஏற்கெனவே இருக்கும் ம.தி,மு.க.வோடு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்துவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் களத்தில் இறங்கிவிடுவார்கள்.
மேலும், கடைசி நேரத்தில் பா.ம.க.வும் இந்தக் கூட்டணியில் வந்து சேர ஒரு வாய்ப்புண்டு.

இப்போதைக்கு அ.தி.மு.க. கூட்டணி இப்படித்தான் அமையும். அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்தால் அது எடுபடுமா? என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான சரியான பதிலைச் சொல்ல இன்னும் சில காலம் பொறுத்தே ஆக வேண்டும்.

Monday, September 1, 2008

தொடரும் மின்வெட்டும் அதன் அரசியலும்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டின் தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. 'மின்வெட்டா? அப்படி ஏதும் இல்லையே!' என்று முதலில் நழுவப் பார்த்தார்கள் ஆளும் கட்சியினர். பிறகு, உண்மைதான், ஆனால் நிலைமை சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிலைமை சரி ஆவதற்கு பதிலாக இப்போது மின்னல் வெட்டாக மின்வெட்டு தமிழன் தலையில் விழுந்திருக்கிறது.

இதுநாள் வரை நகர்ப்புறங்களில் 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டி இனி 1.30 மணி நேரம் வரை இருக்கும் என்று அரசாங்கம் சொல்லி இருக்கிறது. சிறிய நகரங்களில் சுமார் 3 மணி நேரம் வரையும் கிராமப்புறங்களில் 5 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் போகலாமாம்.

என்னாச்சு நம் மின் துறைக்கு? இதுநாள் வரை இல்லாத மின் தட்டுப்பாடு இந்த ஆண்டு மட்டும் எப்படி வந்தது? அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்ப நமது அரசாங்கங்கள் மின் உற்பத்தி செய்யவில்லையா?

மக்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு அரசாங்கம் வெள்ளை அறிக்கை கொடுத்துத்தான் நிலைமையை விளக்கிச் சொல்ல வேண்டும்.

என்னைப் பொருத்த வரை, இந்த மின்வெட்டுக்கு ஒரு அரசியல் காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன் வைக்கப் போகும் மிக் முக்கியமான பிரச்னை, தேச வளர்ச்சி.

'தேசம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், நாம் இன்னும் அதிகமாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் மிகவும் அவசியம். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்' என்று இந்த மின்வெட்டின் மூலம் காங்கிரஸ் கட்சி சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ!

மின்வெட்டை அனுபவித்து வரும் மக்களும் ஆமாம், ஆமாம், மின்சாரம் நமக்குத் தேவை என்றால் அணு ஒப்பந்தம் தேவைதான் என்று சொல்லவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மின்வெட்டு ஓட்டாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.