Wednesday, February 27, 2008

கேரளத்தின் முயற்சியைத் தடுப்போம்!

இந்தியா ஒரே நாடு என்று சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், பக்கத்தில் இருக்கிற மாநில மக்கள் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன என்று நினைக்கும் சில் மாநில அரசுகளை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தண்ணீர் விஷயத்தில் தமிழகத்தைச் சுற்றி இருக்கிற மூன்று மாநிலங்களும் கொஞ்சமும் நேர்மையாக நடந்து கொள்வதில்லை.

பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது. எனவே, குறிப்பிட்ட அடிக்கு மேலே தண்ணீர் தேக்கக்கூடாது என்று இத்தனை நாளும் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தது கேரளம். இப்போது பெரியாறு அணையின் கீழ் பகுதியின் புதிதாக ஒரு அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக ரூ.126 கோடி ரூபாயையும் செலவு செய்யப் போகிறது.

பெரியாறு அணையில் தண்ணீர் வராமல் இருக்க கேரளம் கட்டும் இரண்டாவது அணை இது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த அணையைக் கட்டத் தேவையான மணலை தமிழகத்திலிருந்து எடுத்துக் கொண்டு போகப் போகிறார்களாம். அதாவது, நம் மீது கல்லறை எழுப்ப நாமே செங்கற்களை அடுக்கி வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்?

கேரளாவின் சில மாவட்டங்களில் வீடு கட்டத் தேவையான மணல் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்துதான் செல்கிறது. கேரள ஆறுகளில் மணல் குறைவு. அப்படியே இருந்தாலும் அதை அள்ளக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது.

ஆனால், வீடு கட்ட மணல் தேவை என்றால் தமிழ்நாட்டிலிருந்து ஆற்று மணலை அள்ளிக் கொண்டு போய்விடுகிறார்கள். நம்மவர்களும் காசு கிடைத்தால் ஆற்று மணல் என்ன, ஆற்றையே எடுத்துக் கொண்டு போங்கள் என்கிற மாதிரித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாம் இப்படிச் செய்தது போதும். இனிமேலும் காசுக்கு ஆசைப்பட்டு ஆற்று மணலை கேரளாவுக்குக் கொண்டு போக அனுமதிக்கக் கூடாது. `தமிழகத்திலிருந்து மணல் சப்ளை செய்யாவிட்டால் கேரளா புதிய அணை கட்டவே முடியாது' என்று பொதுப்பணித் துறையின் சிறப்புக் கண்காணிப்பாளர் (ஓய்வு) கோமதிநாயகம் மதுரையில் பேசி இருக்கிறார். (பார்க்க: 27.10.2008 தினமலர் நாளிதழ்)

பெரியாறு அணை விவகாரத்தில் முரண்டு பிடித்த கேரள அரசை வழிக்குக் கொண்டு வர தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கெனவே இது போன்ற ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வதை தமிழக அரசால் எளிதில் தடுக்க முடியும். தமிழக அரசாங்கம் இதை அவசியம் செய்ய வேண்டும். பெரியாறு அணை மீது அக்கறை கொண்ட அனைவரும் இது தொடர்பாக அரசை வற்புறுத்த வேண்டும்.

Monday, February 25, 2008

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.

ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தார்கள். எடுத்தபடி செய்தும் காட்டினார்கள். இன்று அந்தக் கிராமம் செயற்கை உரம் என்கிற அரக்கனிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது.

(செயற்கை) உரத்தை பயன்படுத்தவில்லை எனில் எப்படி பயிர்களைப் பாதுகாப்பார்கள்? இதனால் அவர்களுக்கு நஷ்டம் வராதா என்று நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக ஒரு நயா பைசா நஷ்டம் வராது. காரணம், அவர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் (Integrated Pest Management) கையாள்கிறார்கள். அது என்ன பயிர் பாதுகாப்பு முறை?

சிம்பிள். இயற்கை பல நூறு பூச்சிகளை உருவாக்கி இருக்கிறது. இதில் நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு. கச்சிதமாகக் கணக்கெடுத்தால் கெட்டவை விட நல்லவையே அதிகம். எனவே பயிர்களுக்கு வில்லன்களாக மாறும் கெட்ட பூச்சிகளை அழிக்க நல்ல பூச்சிகளே போதும். தனியாக உரம் ஏதும் பயன்படுத்த வேண்டியதில்லை. இது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.

இந்த உண்மையைத் தெரிந்த கொண்டதால்தான் நம் முன்னோர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்த செயற்கையான பூச்சி மருந்தையும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்தார்கள்.

இன்று நாம் பூச்சிகளைக் கொல்ல செயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம். அது கெட்ட பூச்சிகளை அழிப்பதோடு நல்ல பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. செலவுக்குச் செலவு, நஷ்டத்துக்கு நஷ்டம். நம் வயல்களில் செயற்கை உரத்தை பயன்படுத்துவது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

ஈரோட்டு விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.1500 மிச்சப்படுத்தப் போகிறார்களாம்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளும் இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை உரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்.