Monday, July 16, 2007

மன்னித்துவிடு மழையே!

கவிஞர் பாலு சத்யா நமக்கு ஒரு கவிதையை அனுப்பி இருக்கிறார்.

மழை - எல்லோரும் ரசிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் இந்தக் கவிஞருக்கோ வேறு மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கிறது. படித்துப் பாருங்களேன். இனி, கவிதை.






நிஜம்



தென்மேற்குப் பருவத்தில்
நாறிவிடுகிறது
பத்தடிக்கும் குறைவான
எங்கள் செம்மண்தெரு.

கால்களை
வைக்கமுடியவில்லை
தெருவில்.

நகராட்சி ஊழியர்
அள்ளிப்போகாமல் விட்ட
இரண்டுநாள் குப்பையில்
உபயோகித்துக் கழித்த
ஆணுறை.

பக்கத்துவீட்டுக்
கைக்குழந்தையின் தாய்
வீசியெறிந்த
பிளாஸ்டிக் கவர் நனைந்து
செருப்பையும் மீறி
கால்விரல்களை
அலர்ஜிக்குள்ளாக்குகிறது
குழந்தை மலம்.

எதிர்க்கடை மளிகைக்காரர்
கழித்துப்போட்ட
அழுகிய தக்காளியோ...

நான்குவீடு தள்ளியிருக்கும்
வறட்டு இறுமல்காரரான
தொழுநோயாளியின் எச்சிலோ...

மழைக்குத் தப்பிவந்த
கருந்தேளோ...

எது வேண்டுமானாலும்
என் காலைப் பதம்பார்க்கலாம்.

ஆடிக்கொருமுறை
உடைப்பெடுக்கும்
பாதாள சாக்கடையால்
தாங்கமுடியவில்லை
இந்த மழையை.

இரும்பு மூடியை
மீறிக் கொண்டு
வழிந்தோடும் சாக்கடைநீர்
மழைநீரை முந்திக்கொண்டு
கால் நனைக்கிறது.

மன்னித்துவிடு மழையே!
என்னால் உன்னை
ரசிக்க முடியவில்லை.

- பாலு சத்யா

Friday, July 6, 2007

பள்ளித்தளம் - கட்டாயம் படிக்க வேண்டிய சிறுகதை!

2008, ஜூன் மாத புதிய பார்வையில் பள்ளித்தளம் என்று ஒரு சிறுகதை பிரசுரமாகி இருக்கிறது. ச.பாலமுருகன் எழுதிய கதை இது. இவர் எழுதிய சோளகர் தொட்டி என்கிற நாவலும் அற்புதமான நாவல். இந்தச் சிறுகதையைப் படித்து முடித்தபோது என் தாய்நாடு இன்னும் கேவலமான நிலையில் இருப்பதை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இனி சிறுகதை...

அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிஉம். மணியாச்சி பள்ளத்திற்கு மேல் தம்புரெட்டி, ஒன்னகரை, கொங்காடை போன்ற மலை கிராமங்களுக்கு கால் தடத்தில்தான் நடந்துபோக வேண்டும். மணியாச்சி பள்ளத்தில் எல்லாக் காலங்களிலும் தண்ணீர் சலசலத்து ஓடும். காலை ஒன்பதரை மணிக்கு ஒன்னகரை பள்ளியின் காலை வழிபாட்டு சப்தம் மணியாச்சி பள்ளத்தில் உள்ளவர்களுக்கு லேசாகக் கேட்கும். மலைப்பகுதிகளில் தொலைதூரத்தில் கூப்பிடும் ஒலி கேட்பதை பலசமயம் நான் ஆச்சர்யத்துடன் உள்வாங்கியது உண்டு.

ஒன்னகரையின் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியனாக நான் பணிபுரிந்தேன். எனக்கு ஆசிரியருக்கான எந்தத் தனித் தகுதியும் கிடையாது. எனக்குப் பாடத்திட்டத்தில் எவ்வித வரையறையும் இல்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களைச் சொல்லித்தர வேண்டும். அவர்களை கையொப்பமிட பழக்க வேண்டும். எழுத்துக்கூட்டி அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். என் பள்ளியில் பதினாறு மாணவர்கள் இருந்தார்கள். எல்லோருக்கும் ஐந்து வயதிலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள். என் பள்ளி பல சமாம் திறந்தவெளியில் நடக்கும். மணியாச்சி பள்ளத்திற்கு சில சமயம் மாணவர்களுடன் வந்துவிடுவேன். நீரோடையில் சூரியக் கதிர்கள் பிரதிபலித்து பளிச்சிடும். அந்நீரோடையின் கரையில் நெடிய நாகமரமும் ஈட்டிமரமும் இருக்கும். அதில் கனத்த கரிய தேன்கூடுகள் அதிகமிருந்தது. நான் என் பள்ளிக் குழந்தைகளிடம் கேட்பேன்.

"இம்மரத்தின் பெயரென்ன?"

"இது பெஜில் மரம்" ஒரு சேரக் குரல் வரும்.

"அது சரி, இதன் பயன்பாடு என்ன?"

"கூதல் காய, அடுப்பு எரிக்க்..."

"அதைத் தவிர இந்த மரம் இம்மலைக்கு என்ன பயன் தருகிறது?"

குழந்தைகள் மெளனமாக இருந்தபோது, "உங்க அம்மா, அப்பா, தாத்தாகிட்டே கேட்டுட்டு வந்து நாளைக்குச் சொல்லணும்."

நான் நீரோடையில் கரையிலிருந்த மணலில் படுத்தபடியே நாகமரங்களின், ஈட்டி மரங்களின் குடை போல விரிந்த கிளைகளைப் பார்ப்பேன். என்னைச் சுற்றிலும் குழந்தைகளும் படுத்துக் கொள்வார்கள். நீரோடையின் சலசலப்பினூடே மரத்திலிருக்கும் குயில்களின் கீக்கி சப்தம் கேட்கும்.

``இந்தக் குயில்கள் எந்த மரத்தை இங்கே உருவாக்கக் காரணமாகயிருக்கின்றது?''

குழந்தைகள் மெளனமாக ஒருவரை ஒருவரு பார்த்துக் கொண்டார்கள். மகாதேவன் மட்டும் அவனின் பளிச்சிடும் கண்களை சிமிட்டிக் கொண்டு `சந்தன மரம்' என்றான்.

நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். அவனின் கண்ணத்தைத் தட்டி, `எப்படிச் சொல் பார்க்கலாம்' என்றேன்.

``இந்தக் குயில்கள் சாப்பிட்டு எச்சமிடும்போது விழும் சந்தனப் பழ விதைகள் மட்டுமே சந்தன மரமாக முளைக்கும்.''

எல்லாக் குழந்தைகளும் மகாதேவனைப் பார்த்தனர்.

``குயில்கள் இல்லை என்றால் சந்தன மரங்களில்லை''

எல்லாக் குழந்தைகளும் ஒருமுறைச் சொல்லச் சொன்னேன். குழந்தைகளின் உரத்த குரலில் சப்தத்தினால் மரத்திலிருந்த குயில்கள் சிறகடித்துப் பறக்கத் துவங்கின.

நான் இப்பள்ளிக்கு ஆசிரியனானதும், பள்ளி வந்ததும் எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். பழங்குடி மக்களின் சங்கம் ஒன்று ஒன்னகரையில் இருந்தது. ஒன்னகரை கொத்துக்காரன் ஜவனன் சங்கத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருந்தார். மலை கிராமத்தில் பள்ளிக்கூடம் வேண்டி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான தயாரிப்புக்காக நான் அன்று ஒன்னகரை வரும்போது மதியம் மூன்று மணியாகிவிட்டது. ஊரில் ஜவனன் இல்லை. அவர் பாங்காட்டில் உள்ள மாட்டிப்பட்டிக்குப் போய்விட்டார் என்ற தகவல் வந்தது. ஜவனனை அவசியம் பார்க்க வேண்டும் என்பதால் தொட்டியிலிருந்த பசுவனும், சடையனும் என்னை பார்ங்காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். உன்னிப் புதர்களும் நெருக்கமான மரங்களுமடைந்த அந்த வனத்தில் நாங்கள் கால் தடப்பாதையில் நடந்தோம். பாதையின் பல இடங்களில் யானை மற்றும் சிறுத்தையின் ரத்திகள் காய்ந்து கிடந்தன. எனக்கு ஊன்றுவதற்கு ஒரு மூங்கில் கம்பினை வெட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் மாட்டுப்பட்டியை அடையும் சமயம் சூரிய வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. மாட்டுப்பட்டி மலையின் சரிவில் இருந்தது. சுமார் ஐம்பதிலிருந்து எழுபத்தி ஐந்து மலை மாடுகள் அங்கிருந்தது.

மலைச்சரிவு முடிந்த சமதளம் வரும் பகுதியில் அந்தப் மாட்டுப்பட்டி இருந்தது. மாடுகளை வனத்திற்குள் காலியில் மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலையில் பட்டியில் அடைப்பார்கள். வருடத்திற்கு பத்து மாதம் இங்கேயே மாடுகள், ஆட்கள் தங்க மூன்று குடிசைகள் போடப்பட்டிருந்தது. அதன் கூரையாக ஒழுங்கின்றி சிதறிக் கிடந்த கானாம்பில் கட்டப்பட்ட கத்தைகள் சில கிடந்தது. மூங்கில் குழலில் ஒரு கட்டில். அதன் கீழே நேற்று விறகு மூட்டி கூதல் காய்ந்த விறகின் மிச்சமிருந்தது. மாடுகள் அப்போதுதான் வனத்திலிருந்து ஓட்டிவந்து பட்டியில் அடைத்துக் கொண்டிருந்தனர். பட்டியைச் சுற்றிலும் ஒப்புக்குச் சில காய்ந்த மரங்களின் தடுப்பு வேலை இருந்தது. மாடுகளை ஓட்டி வந்ததில் நான்கு சிறுவர்களுமிருந்தனர். கிழிந்த அழுக்கடைந்த சட்டை மற்றும் சிராயுடனிருந்தனர். அதில் ஒருவன் துருதுருவென கண்களைச் சிமிட்டிப் பார்த்தான். பின் குடிசைக்குள் வந்து நின்று கொண்டான். அங்கு என்னைப் பார்த்ததும் கொத்துக்காரன் ஜனனன் மகிழ்ந்து போய் வணக்கம் சொன்னார்.

நான் குடிசைக்குள் நின்ற சிறுவனைப் பார்த்து பெயர் கேட்டேன்.

``மகாதேவன்'' என்றான்.

``அவனுக்கு இனிமேல் விடியும் வரை கண் தெரியாது - மாலைக்கண்'' என்றார் ஜவனன்.

எனக்குள் அச்சிறுவனைப் பார்த்து பெரும் சோகம் எழுந்தது. அவன் கட்டிலுக்குக் கீழே உள்ள விறகு கிடந்த இடத்தின் அருகில் அமர்ந்து கொண்டான். மகாதேவன் கொத்துக்காரனின் பேரன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் தாய் நோயில் இறந்து போனாள். அதன்பின் அவனின் அப்பன் அவனை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

இரவு வளர்ந்ததும் கூதல் எடுக்கத் துவங்கியது. சுற்றிலும் பாங்காடு என்பதால் சில்வண்டுகளின் இடையறாது ஒலிக்கும் சப்தம் கேட்டது. கூடவே மாடுகளின் சப்தம். கொத்துக்காரன், விறகைப் பற்றவைத்துவிட்டு என்னைக் கட்டிலில் உட்கார வைத்தார். நான் மகாதேவனின் கண் பிரச்சினைக்குக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அருகில் களி தயாராகிக் கொண்டிருந்தது. கொத்துக்காரர் எங்களின் அருகில் உட்கார்ந்து கூதல் காய்ந்து கொண்டிருந்த சிறுவனைத் தயிர் கொண்டுவரச் சொன்னார். அவன் அருகிலிருந்த மரத்தில் ஏறி மரக் கிளையிலிருந்த ஒரு மண்செப்பை எடுத்து வந்தான். காலையில் மாடு ஓட்டிப் போகும்போது புரையூற்றி சாப்பாடு கட்டிச் சென்ற பால் தயிராகியிருந்தது. களியைத் தயிருடன் பிசைந்து சாப்பிடும் சமயம் பெருமூச்சுவிடும் பிளிறல் கேட்டது. நான் உறைந்துபோய் நின்றேன். நான்கு யானைகள் மாட்டிப் பட்டியின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. நிலவொளியிலும் அதன் கண்கள் பிரகாசித்தன. கொத்துக்காரன் என்னை சப்தமிடாமலிருக்க சைகை காட்டினார். சில நிமிடங்களுக்குப் பின் அதனை விலகி அப்பால் போய்விட்டது. எங்களுடன் இருந்த சிறுவர்கள் யானைகள் அசைந்து போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். என் வாழ்வில் காட்டு யானைகளை வெகு அருகில் அன்று பார்த்தேன். வாழ்வுக்கும் மரணத்துக்கும் வெகு குறுகிய இடைவெளியை உணர்ந்தேன். கொத்துக்காரர் களி சாப்பிடச் சொன்னார். அந்த என்னை வெறு வகையாக யோசிக்க வைத்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை. கொத்துக்காரர் ஜவனன் பேசிக் கொண்டே இருந்தார். விடியும் தருவாயில் ஒன்றைச் சொன்னேன். ``ஊரில் ஒரு பள்ளிக்கூடம் அமைக்க முடியும் என்றால் நான் ஆசிரியராகப் பணிபுரிந்து குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறேன்'' என்று.

விடிந்த பின்னே மாட்டுப் பட்டியை பசுவனையும் சடையனையும் பார்க்கச் சொல்லிவிட்டு கொத்துக்காரர் என்னுடன் வந்தார். மகாதேவனும் மற்ற மூன்று சிறுவர்களும் என்னுடன் ஒன்னகரை வந்தார்கள். கொத்துக்காரர் தொட்டிக்காரர்களிடம் பேசிவிட்டு நாகி என்ற பெண்ணின் ஆரியம் தட்டிய களத்துமேடும் அவளின் குடிசையையும் தற்போது பள்ளிக்கூடமாக உபயோகிப்பது என்றும் அந்த ராகி அறுத்த வயலை ஒட்டிய இடத்தில் உள்ள மேட்டு நிலத்தில் பள்ளிக்குக் குடிசை போடுவது என்றும் முடிவானது. நான் தற்கால பள்ளிக் குடிசையின் முன்பிருந்த களத்தில் அருகருகே தூரக்கிடந்த இரண்டு கவை உள்ள சாய்ந்த மரங்களை நட்டேன். அந்த இரண்டு கவைகளுக்கிடையே ஒரு மூங்கிலை வைத்து அதன் மையத்தில் கயிறு கட்டச் செய்து ஊஞ்சலை உருவாக்கினேன். என் பள்ளியில் குழந்தைகள் விளையாடத் தடையில்லை என்றேன். மகாதேவன் முதலில் அந்த ஊஞ்சலில் ஆடத் துவங்கினான். பின் சிறுவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஊஞ்சலுக்காக நின்றனர்.

சங்கத்தினருக்கு என் செயல் ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் புலி வாலைப் பிடித்தது போன்ற இப்பள்ளி விவகாரத்தில் பாதியில் நான் நின்றுவிட்டால் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் சங்கத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும் என்றனர். நான் தொடர்ந்து அக்குழந்தைகளுக்காக ஆசிரியனாக இருப்பதாகக் கூறினேன். விரைவில் மேட்டுக்பகுதியில் நீண்ட கானாம்பில் குடிசைப் போடப்பட்டது. அந்தக் குடிசையினுள் ஒரு பகுதி தடுக்கப்பட்டு என் அறை உருவானது. எனக்கு தொட்டிக்காரர்கள் வீட்டிலிருந்து களி உருண்டையும் குழம்பும் வந்து கொண்டிருந்தது. தொட்டிக்காரர்களுடன் சேர்ந்து மேட்டுப்பகுதியின் சரிவில் கற்களை வைத்து தடுப்பு எழுப்பி அதில் மண்ணை நிரப்பி ஒரு மைதானம் உருவாக்கப்பட்டது. எங்கள் பள்ளியின் காலை வழிபாடு இம்மைதானத்தில் நடந்தது. அங்கிருந்து குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து மணியாச்சி பள்ளத்தில் அப்பால் பேருந்து நிறுத்தம் வரை கேட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் பேருந்து கிளம்புவது மணியாச்சி பள்ளத்தில் வழக்கமாயிற்று. பள்ளி மைதானத்தைச் சுற்றிலும் சந்தன மரநாற்றுகளும் வேப்பமரமும் நடப்பட்டது. கூடவே காய்கறிச் செடிகளை நான் மகாதேவனை மனடில் கொண்டு நட்டேன். மகாதேவன் தினமும் சீங்கை மற்றும் ரக்கினிக் கீரை சாப்பிட்டு வரத் துவங்கினான். மாட்டுப்பட்டிக்கு எந்தச் சிறுவர்களையும் அழைத்துப் போகாமல் எல்லோரும் பள்ளிக்கு வந்தனர். சில சிறுவர்களின் கைகளிலிருந்த சிரங்குக்காக பள்ளி வந்ததும் சிகைக்காய்த் தூளால் கைகால்களைக் கழுவிக் கொண்டு பாடம் படிக்கத் துவங்கினர். அச்சிறுவர்களுடன் நான் இருந்த நாட்கள் என் வாழ்வில் இனிய நாட்களுள் ஒன்று. ஆனால் என் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை.

நான் மலேசியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். மலை வைத்தியம் என் உடலுக்கு ஏற்புடையதாக இல்லாததால் எனக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஈரோட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன். நான் ஒரு மாதம் ஒய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் மிகவும் வெளிறிப் போயிருந்தேன். மீண்டும் மலைக்குப் போவது இயலாமல் போனது.

சங்கத்தினர் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்காக வேறு வழியின்றி பர்கூரில் பத்தாவது படித்திருந்த இளைஞன் வெங்கடேசனை மாதம் ரூபாய் ஆயிரம் சம்பளம் தருவதாகப் பேசி என் இடத்தில் பணியமர்த்தினர். வெங்கடேசன் ஏற்கெனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் சில காலம் வேலை செய்திருந்ததால் அவன் அப்பணிக்கு ஒத்துப் போனான். அரசாங்கப் பாடத்திட்ட புத்தகத்தில் உள்ளவற்றை முறையே சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தான். சிறுவர்களும் வெங்கடேசனிடம் நன்கு பழகிவிட்டனர். நான் சங்கத் தோழர்களுடன் சேர்ந்து மலைப்பள்ளிக்கு ஆசிரியர் சம்பளம் மாதம் ஆயிரம் பெற்று அனுப்ப நன்கொடை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

(Unfinished)

Courtesy: puthiya paarvai