Monday, July 16, 2007

மன்னித்துவிடு மழையே!

கவிஞர் பாலு சத்யா நமக்கு ஒரு கவிதையை அனுப்பி இருக்கிறார்.

மழை - எல்லோரும் ரசிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் இந்தக் கவிஞருக்கோ வேறு மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கிறது. படித்துப் பாருங்களேன். இனி, கவிதை.






நிஜம்



தென்மேற்குப் பருவத்தில்
நாறிவிடுகிறது
பத்தடிக்கும் குறைவான
எங்கள் செம்மண்தெரு.

கால்களை
வைக்கமுடியவில்லை
தெருவில்.

நகராட்சி ஊழியர்
அள்ளிப்போகாமல் விட்ட
இரண்டுநாள் குப்பையில்
உபயோகித்துக் கழித்த
ஆணுறை.

பக்கத்துவீட்டுக்
கைக்குழந்தையின் தாய்
வீசியெறிந்த
பிளாஸ்டிக் கவர் நனைந்து
செருப்பையும் மீறி
கால்விரல்களை
அலர்ஜிக்குள்ளாக்குகிறது
குழந்தை மலம்.

எதிர்க்கடை மளிகைக்காரர்
கழித்துப்போட்ட
அழுகிய தக்காளியோ...

நான்குவீடு தள்ளியிருக்கும்
வறட்டு இறுமல்காரரான
தொழுநோயாளியின் எச்சிலோ...

மழைக்குத் தப்பிவந்த
கருந்தேளோ...

எது வேண்டுமானாலும்
என் காலைப் பதம்பார்க்கலாம்.

ஆடிக்கொருமுறை
உடைப்பெடுக்கும்
பாதாள சாக்கடையால்
தாங்கமுடியவில்லை
இந்த மழையை.

இரும்பு மூடியை
மீறிக் கொண்டு
வழிந்தோடும் சாக்கடைநீர்
மழைநீரை முந்திக்கொண்டு
கால் நனைக்கிறது.

மன்னித்துவிடு மழையே!
என்னால் உன்னை
ரசிக்க முடியவில்லை.

- பாலு சத்யா

1 comment:

Srikanth said...

//
கால்களை
வைக்கமுடியவில்லை
தெருவில்.
//

Exposes the situation well. Good kavithai.

BTW, I read your other posts. Nice blog.

Cheers,
Srikanth.