Monday, June 4, 2007

இந்த முறையும் சம்பா அம்போதானா?

ஜூன் மாதம் பிறந்துவிட்டால் தஞ்சை பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேதி 12. காரணம், இந்தத் தேதியில்தான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து குறுவைப் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவார்கள்.

இந்த ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி அணையைத் திறந்துவிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்கிற ஆசையில் இருந்தார்கள் விவரம் புரியாத அப்பாவி விவசாயிகள் பலர். வழக்கம்போல விவசாயிகளின் ஆசை நிராசையாகிப் போனது.

கடந்த ஆண்டு ஓரளவுக்கு மழை பெய்தாலும் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இப்போது இருக்கும் தண்ணீரின் அளவு சுமார் 77 அடிதான். இவ்வளவு குறைவான நீரைக் கொண்டு விவசாயத்திற்குத் திறந்துவிட முடியாது. ஒருமுறை தண்ணீர் அளிக்க ஆரம்பித்தால் கடைசி வரை அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே, இந்த முறை தண்ணீர் இல்லை. குறுவை போடும் விவசாயிகளின் திட்டமும் அம்போதான்.

தஞ்சை பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு இன்னமும் மேட்டூரிலிருந்து தண்ணீரை எதிர்பார்ப்பதைவிட ஆயிரக்கணக்கில் இருக்கும் குளங்களை தூறெடுத்து மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை நன்றாகத் தேக்கி வைக்கலாம். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக அதிகரிக்கும்.

காரணம், மேட்டூர் தண்ணீரை மட்டுமே நம்பியே ஒவ்வொரு முறையும் சம்பாவை விதைக்க முடியாது. தண்ணீர் கிடைக்கும் போது தேக்கிக் கொள்வதே சிறந்த வழியாக இருக்குமே ஒழிய, கிடைக்கும் போது வழிந்தோட விட்டுவிட்டு, மீண்டும் எப்போது வருமோ என்று எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கக்கூடாது.

1 comment:

Unknown said...

//தஞ்சை பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு இன்னமும் மேட்டூரிலிருந்து தண்ணீரை எதிர்பார்ப்பதைவிட ஆயிரக்கணக்கில் இருக்கும் குளங்களை தூறெடுத்து மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை நன்றாகத் தேக்கி வைக்கலாம். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக அதிகரிக்கும்.

//

தஞ்சை பகுதி விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் செய்ய வேண்டியது.