Wednesday, March 19, 2008

தமிழனுக்கு எதிராக மீண்டும் கிளம்பும் கர்நாடக பூதம்!

இத்தனை நாளும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருந்த கர்நாடக அரசியல்வாதிகள், இப்போது ஒரு லாரி நிறைய ஆசிட்டைக் கொண்டு வந்து தமிழ் நாட்டு மக்களின் தலையில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.


தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தான் குறிப்பிடுகிறோம்.


தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம் முறையற்றது. இந்தத் திட்டத்தின் மூலம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் - முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணாவின் கோரிக்கை இது.


இந்தத் திட்டத்துக்காகத் தண்ணீர் எடுக்கப்படும் இடம் எங்கள் எல்லையில் இருக்கிறது. எங்கள் எல்லையில் எங்களைக் கேட்காமல் தமிழகம் எப்படித் தண்ணீர் எடுக்க முடியும் - தேச ஒற்றுமைக்காகவே(?!) பாடுபட்டு வரும் கர்நாடக பா.ஜ.க. எட்டியூரப்பாவின் கருணை மிக்க கோரிக்கை இது.

வாட்டாள் நாகராஜிலிருந்து பலரும் இதே ரீதியில் ஆளாளுக்குக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகாவில்.


சிலரால் சில பிரச்னைகளை விட்டால் அரசியல் நடத்தவே முடியாது. அமெரிக்காவுக்கு ஈராக் மாதிரி, பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மாதிரி, பா.ஜ.க.வுக்கு அயோத்தி ராமர் கோயில் மாதிரி,
கேரளாவுக்கு முல்லைப் பெரியார் மாதிரி, கர்நாடகாவுக்கு காவிரிப் பிரச்னை.


காவிரி பற்றி பேசாமல் கர்நாடகாவில் அரசியல் காசு பார்க்க முடியாது என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அந்த ஊர் அரசியல்வாதிகள்.


தமிழ்நாட்டில் நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால், உங்கள் விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பாருங்கள். இந்தத் திட்டம் எவ்வளவு நியாயமானது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள்.

கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்துக்குள் இருக்கும் ஒகனேக்க்ல் என்கிற இடத்தில் உள்ளே நுழைகிறது.


குண்டும் குழியுமான இருக்கிறது இந்த இடம். மலைகள், பாறைகள் என்று குவிந்து கிடக்கிறது. தலை தெறிக்க ஓடிவரும் காவிரி இந்த இடத்துக்கு வந்தவடன், தர்மபுரியை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது.

இதன் காரணமாக மேட்டுப் பகுதியில் இருக்கும் தர்மபுரி மக்களுக்கு காவிரியால் எந்த நன்மையும் கிடைக்காமலே போகிறது.


ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். தமிழகத்துக்கே சோறும் போடும் காவிரி ஆறு தர்மபுரி மாவட்டத்தின் வழியாகத்தான் உள்ளே நுழைகிறது. எனினும் அதனால் அந்த மாவட்டத்துக்கு ஒரு பயனும் இல்லை. எனில் அந்த மாவட்ட மக்களுக்கு ஆத்திரம் வருமா, வராதா?


அய்யா, நாங்கள் காவிரி நீரைக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டாம். ரெண்டு போகம், மூன்று போகம் என்று நெல்லறுக்க வேண்டாம். அட, குடிப்பதற்குக்கூடவா எங்களுக்கு வக்கில்லாமல் போய்விட்டது. மேடான நிலத்தில் நாங்கள் பிறந்ததுதான் நாங்கள் செய்த பாவமா? என்று நினைத்து அந்த மாவட்ட மக்கள் எவ்வளவு தூரம் கவலைப்பட்டு கலங்கிப் போயிருப்பார்கள்.


இந்தக் கவலையப் போக்க வந்ததுதான் தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம்.


இன்றல்ல நேற்றல்ல, 1965-ஆம் ஆண்டே இந்தத் திட்டத்துக்கான யோசனை பிறந்துவிட்டது. வீராணம் திட்டம் பெரிய அளவில் பேசப்படாத காலம் அது. ஒகனேக்கலில் இருந்து குழாய் மூலமாக சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வரலாமா என்றுதான் முதலில் யோசிக்க ஆரம்பித்தார்கள்.


பிற்பாடு இந்த யோசனை அவ்வளவு சாத்தியமில்லை என்றவுடன் மேற்கொண்டு யோசிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் தர்மபுரி மக்களின் தாகம் தீரும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்ட இந்தத் திட்டம் நிறைவேறாமல் தள்ளிக் கொண்டே போனது. இதற்கு முக்கியமான காரணம், நிதி. பல நூறு கோடி ரூபாய் தேவையாக இருந்தது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற.

அகில உலக கடன் புகழ் ஐ.எம்.எப். இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவி அளிக்கவில்லை. இன்னோரு அகில உலக கடன் புகழான உலக வங்கியும் இந்த்த் திட்டத்துக்கு கடன் கொடுக்கவில்லை.

தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர்ந்த ஜப்பான் இந்தத் திட்டத்துக்குத் தேவையான பணத்தை கடனாகக் கொடுக்க முன்வந்தது. கடன் என்றால் சும்மா அல்ல. வட்டிக்குத்தான். என்றாலும் இந்தப் பணத்தைப் பெற ஜப்பானிய அதிகாரிகளுடன் பல முறை தொடர்ந்து பேச வேண்டியிருந்தது.


ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, இப்போது திட்டத்தை ஆரம்பிக்கலாம். இத்தனை நாளும் தாகத்தால் தவித்த தர்மபுரி மக்களுக்குத் தண்ணீர் கொடுக்கலாம் என்றால் பிரச்னை பண்ணக் கிளம்பிவிட்டார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.


இந்தத் திட்டத்துக்காக காவிரியிலிருந்து குடிப்பதற்காக கொஞ்சம் தண்ணீரைத்தான் எடுக்கப் போகிறது தமிழக அரசாங்கம். சில லட்சம் மக்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படப் போகிறது?

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்றால் அது போல முட்டாள்தனமான வாதம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அப்படியே மிகச் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அது பற்றி தஞ்சை விவசாயிகள்தான் கவலைப்பட வேண்டுமே ஒழிய கர்நாடகாவுக்கு அந்தக் கவலையே தேவை இல்லை.


இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் கர்நாடக அரசியல்வாதிகளை இஷ்டத்துக்கு பேச வைத்திருக்கிறது.


மற்ற அரசியல்வாதிகள் இப்படிப் பேசினால்கூட புரிந்து கொள்ள முடியும். காரணம், அப்படிப் பேசினால்தான் அவர்களால் அரசியல் பிழைப்பு நடத்த முடியும். ஆனால், முன்னாள் முதல்வராக இருந்த கிருஷ்ணாவுக்கு என்ன குறைந்து போய்விட்டது?

இனிமேல் முதல்வர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் கவர்னர் பதவி தேடி ஓடினார் கிருஷ்ணா. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்ககலாம் என்று தெரிந்தவுடன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

(கிருஷ்ணாவைத் தொடர்ந்து அண்மையில் புதுச்சேரி கவர்னரும் பதவியை ராஜினாமா செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.)

கவர்னர் பதவி என்பது எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டிய பதவி. உள்ளதை உள்ளபடி மத்திய அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டிய பதவி.

கண்ணியம் மிக்க இந்தப் பதவியில் இருப்பவர்கள் பதவிக் காலம் முடிந்த பிறகு அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவது நல்லது, இந்திய ஜனாதிபதிகள் செய்கிற மாதிரி.

ஆனால் இப்போதுள்ள சில கவர்னர்கள் அந்தப் பதவியை ஒரு சொகுசாகத்தான் பார்க்கிறார்களே ஒழிய, பொறுப்பான பதவி என்று பார்ப்பதாகத் தெரியவில்லை.

மனம் நிறைய முதல்வர் பதவி ஆசையை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர், கட்சி பேதம் பார்க்காமல் ஒரு மாநிலத்தின் உண்மையான நிலைமையை மத்திய அரசுக்கு எப்படித் தெரிவித்திருக்க முடியும்?


மத்திய அரசாங்கம் ஒன்று கவர்னர் பதவியை ஒழிப்பது நல்லது. அல்லது பதவி ஆசை கொண்டவர்களை அந்தப் பதவியில் உட்கார வைக்காமல் இருப்பது நல்லது.


காவிரி சம்பந்தமாக கர்நாடககாரர்கள் மீண்டும் கடை விரித்துவிட்டார்கள். இந்த முறை தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு அல்ல, தருமபுரி மாவட்ட மக்களுக்குத்தான்.


இந்திய நதிகள் அனைத்தும் தேசியச் சொத்து ஆகும் வரை கர்நாடக, கேரள மாநில அரசியல்வாதிகளின் காட்டில் செம மழைதான் போங்கள்!

ஆனால், பாவம் தமிழ்நாட்டு மக்கள்!

1 comment:

ம சி இராஜன் said...

Well Written. issue brought into context. One question for Samsari. Why TN politicians remain divided? We can find motives to Jaya (kaviri thandha kalaichelvi), Rajni and others. But what about 'chanakya' Karunanidhi? Dravida nadu kettavargal mudangi kidappadu yen????