தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டின் தாக்குதல் அதிகமாகவே இருக்கிறது. 'மின்வெட்டா? அப்படி ஏதும் இல்லையே!' என்று முதலில் நழுவப் பார்த்தார்கள் ஆளும் கட்சியினர். பிறகு, உண்மைதான், ஆனால் நிலைமை சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால் நிலைமை சரி ஆவதற்கு பதிலாக இப்போது மின்னல் வெட்டாக மின்வெட்டு தமிழன் தலையில் விழுந்திருக்கிறது.
இதுநாள் வரை நகர்ப்புறங்களில் 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டி இனி 1.30 மணி நேரம் வரை இருக்கும் என்று அரசாங்கம் சொல்லி இருக்கிறது. சிறிய நகரங்களில் சுமார் 3 மணி நேரம் வரையும் கிராமப்புறங்களில் 5 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் போகலாமாம்.
என்னாச்சு நம் மின் துறைக்கு? இதுநாள் வரை இல்லாத மின் தட்டுப்பாடு இந்த ஆண்டு மட்டும் எப்படி வந்தது? அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்ப நமது அரசாங்கங்கள் மின் உற்பத்தி செய்யவில்லையா?
மக்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு அரசாங்கம் வெள்ளை அறிக்கை கொடுத்துத்தான் நிலைமையை விளக்கிச் சொல்ல வேண்டும்.
என்னைப் பொருத்த வரை, இந்த மின்வெட்டுக்கு ஒரு அரசியல் காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன் வைக்கப் போகும் மிக் முக்கியமான பிரச்னை, தேச வளர்ச்சி.
'தேசம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், நாம் இன்னும் அதிகமாக மின் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் மிகவும் அவசியம். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்' என்று இந்த மின்வெட்டின் மூலம் காங்கிரஸ் கட்சி சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ!
மின்வெட்டை அனுபவித்து வரும் மக்களும் ஆமாம், ஆமாம், மின்சாரம் நமக்குத் தேவை என்றால் அணு ஒப்பந்தம் தேவைதான் என்று சொல்லவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
மின்வெட்டு ஓட்டாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Monday, September 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுவையான பதிவு
Post a Comment