Tuesday, June 19, 2007

காய்கறி வளர்க்கலாம் வாரியளா?

அப்பாடா, ஒரு வழியாக கோடை காலம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையைச் சுற்றி ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது என் ஆசை.

இந்த மழை காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல யோசனை. உங்கள் வீட்டில் கொஞ்சுண்டு இடம் இருக்கா? கொஞ்சம் இடுப்பை வளைத்து வேலை செய்ய நீங்கள் தயாரா? சத்தான, உடம்புக்கு எந்தத் தீங்கும் செய்யாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா?

மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னீர்கள் என்றால், ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் காய்கறி வளரக்கப் புறப்படலாம்.

உங்கள் வீட்டில் காய்கறி வளர்ப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முதலில் காய்கறிக்காக நீங்கள் செலவு செய்யும் அத்தனை பணத்தையும் மிச்சப்படுத்தி விடலாம். ஞாயிற்றுக்கிழமை காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் கண்ணீர் விட்டு காய்கறி வாங்கினேன். விலைப்பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.

தக்காளி - 32 ரூ. காரட் - 32. பீன்ஸ் - 40. வெங்காயம் - 28. முருங்கைகாய் ஒன்று - 4 ரூ. சென்னையில் லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் கையில் காசு மிஞ்சாது போலிருக்கு.

இந்த மாதிரியான புலம்பலை எல்லாம் வீட்டில் காய்கறி வளர்ப்பதன் மூலம் எளிதாகத் தவிர்த்துவிடலாம். வருஷத்து மூவாயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

தவிர, ரசாயணம் மருந்துகள் கலக்காத காய்கறிகள் உங்களுக்குக் கிடைக்கும். மார்க்கெட்டில் விற்பனை ஆகும் காய்கறிகள் அளவுக்கதிகமான ரசயாண மருந்து கொட்டி வளர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்தக் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மை விட தீமைகளே அதிகம்.

இன்னொரு முக்கியமான விஷயம், சுவை. இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளின் சுவையே தனி. சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதே என்றெல்லாம் சொல்லாதீர்கள். முதலில் தக்காளியைப் பிழிந்து விட்டு வளர்க்க ஆரம்பியுங்கள். பிறகு கீரை, வெண்டை, கத்தரி.. இப்படி ஒவ்வொன்றாக வளர்க்கக் கற்றுக் கொள்ளலாம்.

வீட்டில் இடம் இல்லையா? நோ ப்ராபளம். மாடியில் மண் தொட்டி வச்சு அருமையா காய்கறி வளர்க்கலாம்.

மரம், செடிகொடிகளை வளர்ப்பது என்பது ஒரு வகை தியானம். அது நமக்குக் கொடுக்கும் உற்சாகமே தனிரகம்.

இந்த மழைக் காலத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க காய்கறி வளருங்க. என்ன விதை, எங்கே கிடைக்கும் என்கிற மாதிரி எந்த சந்தேகம் வந்தாலும் இந்த சம்சாரிகிட்டே கேளுங்க.

2 comments:

Vetirmagal said...

good idea. Eating brinjals and Vendaikai from own terrace is an experience. If one has a terrace garden it is fun. A good healthy timepass, and keeps one away from tearful TV serials.

Several tips said...

நல்ல யோசனை