Friday, April 13, 2007

தமிழ் விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்

கட்டாந்தரையில் பசுஞ்சோலை!

செக்கச்செவேலென திரும்பிய பக்கமெல்லாம் தெரியும் செம்மண். காலை வழுக்கும் உருண்டைக் கற்கள். ஆண்டுக்கு மூன்று மாதம் மழை பெய்தாலே அதிகம் என்று சொல்லும் அளவுக்குத் தாகம் தீராத பூமி. அந்த இடத்தைப் பார்த்தால், 'இந்தக் கட்டாந்தரையில் என்ன முளைக்கும்? கருவேலஞ் செடிகளும் பனையும் புளியும் தவிர வேறு என்ன விளையும்?' என்று கேட்கத் தோன்றும். நாமாக இருந்தால் அந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்தால்கூட வேண்டாம் என்று ஒதுங்கியிருப்போம்.

ஆனால், அப்படிப்பட்ட நிலத்தை பசுமை கொழிக்கும் பசுஞ்சோலையாக மாற்றியிருக்கிறார் பெர்னார்ட் கிளார்க். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெற்றுடம்பாக கிடந்த அந்த பூமியில் இன்று குளுமை தரும் மரங்கள் பலப்பல.

பாண்டிச்சேரி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலத்திர்கு அருகே உள்ள பெர்னார்டின் தோட்டத்துக்குள் நுழைந்தால் ஒரு சின்ன காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஒரு பிரமை. அதனால்தானோ என்னவோ அந்த இடத்திற்கு பிருந்தாவனம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த வியத்தகு மாற்றத்தைச் செய்த பெர்னார்டு கிளார்க், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். மேற்கத்திய நாட்டு மனிதர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தையும் அடைந்தவர்கள். அதனால்தான் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி ஆன்ம பயணம் செய்ய எளிதில் துணிந்துவிடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த வளர்ச்சி மனிதனின் வயிற்றை நிரப்பும். ஆனால், ஆன்மாவை ஓட்டை விழுந்த குடமாகவே வைத்திருக்கும் என்பதை சிறு வயதிலேயே உணர்ந்தார் பெர்னார்ட். எனவேதான் முப்பது வயதிலேயே வேலை, சொத்து, சுகம் என்று எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தர் ஆசிரமத்தில் சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை ஆனமப் பயணம் மேற்கொள்ளும் சாதாரண மனிதனாக வாழ்ந்து வருகிறார் பெர்னார்ட்.

'கட்டாந்தரையில் இத்தனை மரங்களை வளர்த்தது எப்படி?' என்று பெர்னார்டிடம் கேட்டோம். பெர்னார்டின் மனைவி தீபிகா, மூலிகைச் சாறு ஜூஸ் கொடுக்க, அதை ரசித்துக் குடித்தபடி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வேண்டும். சலிப்பில்லாத மனித உழைப்பும் ஓரளவுக்குத் தண்ணீரும் இருந்தால் எந்த நிலத்தையும் தரிசு நிலம் என்று ஒதுக்கி வைக்கத் தேவையில்லை என்பது எங்கள் ஆசிரமத்தின் நம்பிக்கை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஏக்கர் நிலத்தைக் கொடுத்து இதில் காட்டை உருவாக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

இடத்தைப் பார்த்தபோது, அது சவால் நிறைந்த வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்றாலும், நம்பிக்கையோடு செய்ய ஆரம்பித்தேன்.
நிலத்தை எப்போதும் சும்மா போட்டு வைத்திருக்கக் கூடாது. இது பாரம்பரிய விவசாயத்தின் பாலபாடம். காரணம், சூரியனில் இருந்து வரும் வெப்பம் நிலத்தை எரித்துவிடும். நுண்ணுயிர்கள் மட்டுமல்ல, மனிதர்கள்கூட இந்த வெப்பத்தில் துவண்டு போவார்கள். எனவே, உடனடியாக ஏதாவது ஒரு மரம் வளர்த்து பூமிக்கு நிழல் தந்து, வெப்பத்திலிருந்து காக்க வேண்டும்.
எனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் இப்படி ஒரு வேலையை உடனடியாகச் செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன். என்ன மரம் வளர்ப்பது என்கிற பிரச்னை தலை தூக்கியது. நீரை தண்ணீரை எதிர்பார்க்காமல் வேகமாக வளரக்கூடிய மரங்களைத் தேடிப் பிடித்தேன். அவசரத்திற்கு எனக்குக் கை கொடுத்தது விராலி மரமும், ஆஸ்திரேலியன் அக்கேசியா என்கிற மரமும்தான்.

இந்த மரங்கள் மழை நீரைக் குடித்தே நன்றாக வளரும். நிறைய இலைகளை நிலத்தில் கொட்டும். மண்ணில் விழந்த இலைகள் மட்கும். மண் வளம் பெறும். நுண்ணுயிர்கள் பிறக்கும். புல் பூண்டுகள் முளைக்கும். அதைச் சாப்பிட ஆடு, மாடுகள் வரும். சாணம் போடும். அதில் இருந்து பூச்சிகள் வரும். அதை உண்ண காக்கைகளும் வரும். கடைசியில் அந்த இடம் பசுமையான விளைநிலமாக மாறிவிடும். இந்த இடத்தையும் நாங்கள் இப்படித்தான் மாற்றினோம்" என்கிறார் பெர்னார்ட்.

"வாருங்கள். இந்தத் தோட்டத்தில் என்னவெல்லாம் விளைகிறது என்று காட்டுகிறேன்" என்று அழைத்தார் பெர்னார்ட். போனால் நமக்கு வியப்புக்கும் மேல் வியப்பு.

பெர்னார்டின் தோட்டத்தில் வாழை நன்றாக குலை தள்ளியிருந்தது. பச்சை வெண்டை, சிகப்பு வெண்டை, குட்டை வெண்டை என வெண்டை மட்டும் நான்கு வகைகளை வளர்க்கிறார். கொடியில் பாகல் சந்தோஷமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. தக்காளி, மிளகாய் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தன. பூசணி, இலைக்குள் மறைந்து கண்ணாமூச்சு காட்டிக் கொண்டிருந்தது. பப்பாளி மரம் படுகம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அவ்வளவு ஏன், பைனாப்பிள்கூட அருமையாக வளர்ந்து இருந்தது. இது தவிர ஏராளமான மூலிகைச் செடிகள்.

"நிலத்துக்குத் தேவையான தண்ணீர் தேங்குகிற மாதிரி முதலில் ஆங்காங்கே சின்னச் சின்ன குழிகளை வெட்டி மழைநீரைச் சேகரியுங்கள். பிளாஸ்டிக் தவிர, மக்கக்கூடிய எந்தக் குப்பையும் இலவசமாகக் கிடைத்தால் உங்கள் நிலத்தில் கொட்டுங்கள்.

ஓரளவுக்கு ஈரப் பதத்தில் விதைகளைத் தூவுங்கள். நீங்கள் விதைக்கும் எந்த விதையும் உங்களை ஏமாற்றாது. கொஞ்சமாக உழைத்ததிலேயே இந்த நிலம் இப்படி மாறியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வளமான நிலங்கள்தான் அதிகம். நாம் உழைக்கத் தயாராக இல்லை. நிலம் தரிசு என்று சொல்லி காயப் போட்டுவிடுகிறோம். நம்பிக்கையோடு எந்த நிலத்தையும் பண்படுத்துங்கள். அதில் நீங்கள் விதைக்கும் எந்த விதையும் முளைக்கும்" என்கிறார் பெர்னார்ட்.

வித்தியாசமான இந்த வெள்ளைக்காரருக்கு தமிழ்நாட்டு விவசாயிகளை வழி நடத்தும் அத்தனை தகுதிகளும் இருக்கின்றன.

1 comment:

வடுவூர் குமார் said...

நிச்சயமாக,பெர்னார்ட் மார்க்- ஒரு தன்னம்பிக்கையின் "விதை".