Thursday, August 14, 2008

விளைச்சலைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்துக்கு!

பள்ளிக்கூடம் போய் படிக்காமலே அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் மாமேதையாகயும் விளங்குகிற மண்ணாங்கட்டிக்கு கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை.

அவனுக்கு இது கேடு காலம். அதனால் அவன் விளங்காமல் போய்க் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள் சிலர். அளவுக்கதிகமாக வெயிலும் மழையும் மாறி மாறி அடிப்பதால்தான் அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்கள் வேறு சிலர்.

மண்ணாங்கட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு உண்மையான காரணம், சமீப காலமாக தனக்குக் கொஞ்சமும் ஒவ்வாத, தன் உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய சாப்பிட்டு வருவதுதான்.

இந்த உண்மையை உணர்ந்து மண்ணாங்கட்டிக்கு மருத்துவம் செய்ய யாருமே தயாராக இல்லை. பல மருத்துவர்களும் தப்பும் தவறுமாக மருத்துவம் செய்த பிறகு ஒரு நன்னாளில் ஊர்ப் பெரியவரின் இளைய மகன் சொன்னான்.

‘'இனி மண்ணாங்கட்டி உடுத்தும் உடைகள் ஆற்றுப்படுகையில் துவைத்து கழுதை மீது கொண்டு வரவேண்டாம். கழுதைக்கு பதிலாகக் குதிரைகளின் மீது ஏற்றி வருவோம்''.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு பதினெட்டு பட்டியும் பலத்த கரகோஷம் செய்தது. ஆனால், மண்ணாங்கட்டியோ தன் வேதனையை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்று மெளனமாக அழுது கொண்டிருந்தது.

இது ஏதோ ஒரு குட்டிக்கதை அல்ல. இந்திய விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை. மண்ணாங்கட்டி என்பது வேறு யாரும் அல்ல, இந்திய விவசாயமும் விவசாயிகளும்தான்.
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த விவசாய விளைபொருட்கள் உற்பத்தி தொடர்பாக நடந்த கூட்டத்தின் முடிவுகளைப் பார்க்கிற போது மண்ணாங்கட்டிக்கு நேர்ந்த கதி நினைவுக்கு வருகிறது.

செம்மை செல் சாகுபடி மற்றும் விவசாயத் திட்டங்களை தீவிரப்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க தமிழக விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மதுரைச் சுற்றி இருக்கும் 15 மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்து நடத்தி இருக்கிறார். இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டிய இந்தக் கூட்டம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவது என்கிற கங்கணத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கும் அமைச்சருக்கு நம் பாராட்டுகள்.

பெருகி மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியையும் நாம் அதிகரித்துத்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை இந்த அரசாங்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் என்கிற மாபெரும் பிரச்னை ஒரு பக்கமிருக்க, விளைநிலங்கள் வீட்டடிமனைகளாக மாறிவரும் கொடுமையும் இன்னொரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் படுத்துவிட்டாலும் (சப்-பிரைமின் கைங்கர்யம்) தமிழ்நாட்டில் மரமேறிய பேயாக அரற்றிக் கொண்டுதான் இருக்கிறது. பச்சைப் பசேல் என விளைந்த நிலங்கள் எல்லாம் கட்டம் கட்டி விற்பனையாகும் பண்டமாக ஆகிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் வளரும் ஒரு குழந்தைக்கு நெல் வயலைக் காட்ட வேண்டுமென்றால் குறைந்தது 25 கி.மி. தூரமாவது பயணம் செய்தாக வேண்டிய நிலை. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது.

பொதுவாக ஒரு மாவட்டத்தில் மிகப் பெரிய அதிகாரம் கொண்டவர் மாவட்ட ஆட்சித் தலைவர். மத்திய, மாநில அரசாங்கங்களின் திட்டங்களை சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கிற வேலை மாவட்ட ஆட்சித் தலைவரையே சாரும். எல்லாத் துறைகளின் நடவடிக்கைகளையும் கவனிக்கிற மாதிரி விவசாய உற்பத்தியையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதுநாள் வரை கவனித்தே வந்திருக்கிறார்கள். இந்தக் கண்காணிப்பு போதாது, இன்னும் கவனம் தேவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைத்து சொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இப்படிச் செய்வதால் எல்லாம் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்துவிட முடியுமா? விவசாயிகளின் துயரைத் துடைத்துவிட முடியுமா?

நிச்சயம் முடியாது. உடம்புக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள உடம்பை பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தித்தான் ஆக வேண்டுமே ஒழிய, பெண் நர்ஸுக்கு பதிலாக ஆண் நர்ஸைக் கொண்டு வந்தால் சரியாகிவிடாது.

இன்றைய தேதியில், விவசாய உற்பத்தி மிகப் பெரிய அளவில் குறைந்து வருவதற்குக் காரணம், செயற்கை உரங்களை மானாவாரியாக அள்ளித் தெளித்து விளைநிலங்களை சுடுகாடுகளாக்கும் மாடர்ன் விவசாய முறைகளினால்தான். செயற்கை உரங்களை பெருமளவில் பயன்படுத்தும் போது செலவும் ஏகத்துக்கு எகிறுகிறது. விளைநிலங்களும் தன் சக்தியை இழக்கிறது.

இந்த செயற்கை விவசாயத்தை விட்டொழித்து விட்டு, இயற்கை விவசாயத்து நாம் மாறுவோம் எனில், சத்தான, சுவையான உணவை நம் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க முடியும். “இயற்கை விவசாயத்தில் விளைச்சல் இருக்காது. அனைத்து இந்திய மக்களுக்கு சோறு போட முடியாது” என்று சிலர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சார பீரங்கிகள் வாய் கிழிய கத்துவதோடு சரி, புளியங்குடி விவசாயி அந்தோணிசாமி அண்ணாச்சியின் சவாலை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவதே இல்லை.

அரசாங்க அதிகாரிகள் பலரும் 'இயற்கை விவசாயம்தான் சரி. ஆனால், சில பல காரணங்களுக்காக செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நிலத்தில் கொட்டச் சொல்ல வேண்டியிருக்கிறதே!' என்று புலம்புகின்றனர். என்ன புண்ணியம் செய்து தங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் உற்பத்தி பெருக வேண்டுமெனில், இயற்கை விவசாயம் ஒன்றுதான் தீர்வு என்றுதான் என்பதை நம் அரசாங்கம் எப்போதுதான் உணரப் போகிறதோ!

No comments: