Monday, August 25, 2008

ராமதாஸின் வெள்ளைக்கொடியும் கருணாநிதியின் பச்சைக்கொடியும்!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்று கடந்த வாரம் நான் எழுதியிருந்த ஒரு பதிவில், தி.மு.க. - பா.ம.க. மீண்டும் கூட்டணி சேர ஒரு வாய்ப்புள்ளது என்று எழுதி இருந்தேன். இப்போது அது உண்மையாகிவிட்டது. உடைந்த கூட்டணி இவ்வளவு சீக்கிரத்தில் சரியாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தி.மு.க. அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சனம் செய்து வந்தது பா.ம.க. பா.ம.க.வின் முக்கியப் பிரமுகர் குருவின் மீது நடவடிக்கை எடுத்ததால் கூட்டணியை முறித்துக் கொண்டது அந்தக் கட்சி.

ஆனால், மத்திய அரசின் அமைச்சர் பதவியை பா.ம.க. தொடர்ந்து வகித்து வந்தது. இதிலிருந்தே பா.ம.க., காங்கிரஸ் கட்சியுடனே தொடர்ந்து இருக்க விரும்புகிறது என்பது தெளிவானது.

காங்கிரஸும் பா.ம.க.வை விட்டுவிடத் தயாரில்லை. காங்கிரஸைப் பொருத்தவரை, பா.ம.க.வின் புலிகள் ஆதரவு போன்ற விஷயங்கள் எல்லாம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டால், அது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால் அ.தி.மு.க.வுக்குத்தான் லாபமாக இருக்கும் என்பதை காங்கிரஸ் நன்றாக அறிந்திருந்தது.

இதனைத் தடுத்தும் நிறுத்த தி.மு.க. - பா.ம.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டும் மத்திய அமைச்சர் பா.சிதம்பரமே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பா.ம.க. மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள கொள்கை ரீதியில் ஒப்புதல் தெரிவித்துவிட்டார் தமிழக முதல்வர்.

பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பச்சைக்கொடியைக் காட்டுவதற்கு முன்பே, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தாம் கூட்டணிக்குத் தயார் என்று வெள்ளைக்கொடி காட்டிவிட்டார். மத்தியில் காங்கிரஸ் கட்சி மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது போல, தமிழ்நாட்டில் தி.மு.க. மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், தி.மு.க.வுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம் என்று ராமதாஸ் சொல்லி இருந்தார். ராமதாஸ் காட்டிய இந்த வெள்ளைக்கொடிக்குத்தான் கருணாநிதி இப்போது பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.

No comments: