Thursday, August 21, 2008

மேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்!

இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான்.

அப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி, சீராட்டி, தேவைப்பட்ட போது தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கும் மிக முக்கியமான வேலையைச் செய்கிறது மேட்டூர் அணை. காவிரி ஆற்றுப் பாசன விவசாயிகள் காவிரி ஆற்றோடு மேட்டூர் அணையையும் கரிகாலன் கட்டிய கல்லணையையும் மறப்பதே இல்லை.

அத்தகைய சிறப்பு கொண்ட மேட்டூர் அணைக்கு இன்று 75-வது பிறந்த நாள். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்றுதான் மேட்டூர் அணை பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சேலத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மேட்டூர் என்கிற ஊர். இரு பக்கம் மலைக் குன்றுகள். நடுவே உள்ள பள்ளத்தில் கரை புரண்டு ஓடுகிறது காவிரி ஆறு. வெள்ள காலத்தில் பெருக்கெடுத்து ஓடி, நாடு முழுக்க இருக்கும் கழனிகளை நாசம் செய்தது. தடுத்து நிறுத்துவதற்கு வழி இல்லாததால், மழை இல்லாத காலத்தில் காவிரி ஆற்றுத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

இதன் காரணமாக, காவிரி ஆற்றுக்குக் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற யோசனை 1801-ஆம் ஆண்டே பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபையினருக்கு வந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியவுடன் மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அணையைக் கட்டும் முயற்சியைக் கைவிட்டது கிழந்திந்திய சபை.

1835-ஆம் ஆண்டில், சர் ஆர்தர் காட்டன் என்கிற பொறியாளரை மீண்டும் மைசூருக்கு அனுப்பி மேட்டூரில் அணை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று வர அனுப்பியது. அணை கட்ட மைசூர் சமஸ்தானம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டாவது முறையாகவும் திட்டம் கைவிடப்பட்டது.

1923-ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் சி.பி. ராமசாமி அய்யரிடம், தஞ்சை விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு கோரிக்கையை வைத்தனர். மேட்டூர் அணை கட்ட நிச்சயம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றித் தர சம்மதித்தார் சி.பி.ராமசாமி அய்யர். காரணம், இவரது முன்னோர்கள் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே.

திவான் பகதூர் சி.பி. ராமசாமி, மைசூர் சம்ஸ்தானத்தினரை அணுகி, திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்துப் பேசினார். வழக்கம் போல மைசூர் சம்ஸ்தானத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தஞ்சை விவசாயிகள் வேறு ஒரு கோரிக்கை வைத்தனர்.

ஆண்டு தோறும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தினால், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்துக்கு நஷ்ட ஈடாக ஆண்டு 30 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தஞ்சமை மாவட்ட கலெக்டர் மூலமாக ஒரு கோரிக்கை மைசூர் சமஸ்தானத்துக்கு அனுப்பினர்.

ஒவ்வொரு ஆண்டும் 30 லட்ச ரூபாயைக் கொடுப்பதைவிட, மேட்டூரில் அணை கட்டிக் கொள்ள சம்மதிப்பதே புத்திசாலித்தனம் என்று சி.பி.ராமசாமி அய்யர் மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துச் சொல்லி மேட்டூரில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார். (மேட்டு அணை வரலாறு - நன்றி தமிழ் விக்கிபிடியா) நம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் அணை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா?

அணை கட்ட அனுமதி வாங்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, அதற்கான ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 1905 முதல் 1910-ஆம் ஆண்டு வரை ஆய்வுப் பணிகள் நடந்தன. ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு 1924-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அனுமதியும் வழங்கப்பட்டது. 1925-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை மற்றும் வடிவமைப்பு என்ஜினியர் எல்லிஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமைய்யர், முதன்மை தலைமை முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து மேட்டூர் அணையைக் கட்டி முடித்தனர்.


1934-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி கடைசிக்கல் வைத்து அணை கட்டும் பணி முடிந்தது. அதற்கடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 21-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார் அப்போதைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த ஜான் பெடரிக் ஸ்டான்லி. அவரது நினைவாகவே, மேட்டூர் அணை ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் மேட்டும் அணையைக் கட்டி முடிக்க ஆன செலவு 4.80 கோடி ரூபாய். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி. 120 அடி தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி உண்டு. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர். இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே உயரமான, நீளமான சுவரை எழுப்பி இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. அணையிலிருலிருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீர் வெளியேறும் எனில், அணையின் உயரத்தில் 1.25 அடி குறையும்.

கர்நாடக எல்லையைத் தாண்டி ஒக்கனேக்கல் எல்லைக்குள் நுழைந்தவுடன், கரடுமுரடான மலைகளில் ஓடி, மேட்டூர் அணைக்குள் தஞ்சமடைந்துவிடுகிறது காவிரி ஆறு.

மேட்டூர் அணை பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நமக்கு வந்து சேரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஒரு பெரிய அணை கட்டும் போது மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். மேட்டூர் அணை கட்டும் போது எத்தனை கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன? அணை கட்டும் பகுதியில் என்னன்ன இருந்தன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

அணை கட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கு காவிரி அணை தடுத்து வைப்பட்டிருந்ததா? அப்படியெனில், அந்த 10 ஆண்டுகளுக்கு காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் எப்படிச் சாமளித்தனர்? என்பதெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள்.

நடந்தாய் வாழி காவேரியைக் கட்டுப் போடும் மேட்டூர் அணை இன்னும் பல நூறு ஆண்டு காலம் சீறும் சிறப்போடும் இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்!

1 comment:

ஜோசப் பால்ராஜ் said...

இப்போ தான் நானும் ஒரு பதிவு போட்டேன். http://maraneri.blogspot.com/2008/08/blog-post_21.ஹ்ட்ம்ல்

என்னைவிட நீங்கள் பல தகவல்களை கொடுத்துள்ளீர்கள். இது அணைக்கு 74வது பிறந்த நாள், இன்று 75 ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

உங்கள் பதிவுக்கு தஞ்சை மாவட்ட உழவன் மகனின் நன்றிகள்.